பெரம்பூர்: கொரோனா காலக்கட்டத்தில் காவல்துறையின் பங்கு பொதுமக்களால் பெரும் அளவில் பாராட்டப்பட்டது. பல காவலர்கள் இதில் தங்களது உயிரை தியாகம் செய்தனர். அந்த வகையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட பல உதவிகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர். புளியந்தோப்பு சரகத்திற்குட்பட்ட செம்பியம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஸ்ரீ தருக்கு முரசொலி மாறன் பூங்கா அருகே மழையின் காரணமாக ராதா (74) என்ற ஆதரவற்ற மூதாட்டி கடும் குளிரினால் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்ரீதர் காவல் உதவி கரங்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெயரில் தனியார் உதவி மையம் சார்பாக சம்பவ இடத்திற்கு வந்த தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் மூதாட்டியை மீட்டு காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். இதேபோன்று, கொடுங்கையூர் காவல் நிலையத்திற்குட்பட்ட திருவீதி அம்மன் கோயில் தெரு அருகே மழையில் நனைந்தபடி சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் உள்ளதாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி 35 வயது மதிக்கத்தக்க சாலையில் சுற்றித்திரிந்த பெண்ணை மீட்டு கொடுங்கையூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தார். இதேபோன்று, பெரம்பூர் பிபி சாலையில் அடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் வெள்ளம் வழிந்து ஓடியது. இதை செம்பியம் போலீசார் சரி செய்தனர். இதேபோன்று ராகவன் தெருவில் ஏற்பட்ட தண்ணீர் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை போலீசார் செய்தனர். திருவிக நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த முதியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு திருவிக நகர் இன்ஸ்பெக்டர் அன்பரசன் தலைமையில் உணவுகள் வழங்கப்பட்டது. …