திருவனந்தபுரம், ஜூன் 23: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வளாஞ்சேரி பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் பத்தனம்திட்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன் உறவினர் வீட்டில் தங்கியிருந்த போது நள்ளிரவில் திடீரென 3 பேர் கும்பல் வீடு புகுந்து இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட இளம்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக இளம்பெண் வளாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 3 பேர் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டதோடு அவர்களது விவரங்களையும் போலீசிடம் அளித்துள்ளார். இதையடுத்து வளாஞ்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சுனில், சசி, பிரகாசன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.