புதுக்கோட்டை, டிச.2: ஆலங்குடி, பொன்னமராவதியில் இன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளை சேர்க்க முகாம்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளை சேர்ப்பதற்கான முகாம் இன்று 2ம்தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை புதுக்கோட்டை ஆலங்குடி கொத்தக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியிலும், பொன்னமராவதி பொன் புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.
இத்திட்டத்தின்கீழ் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் விடுபட்ட குடும்பத்தினரை இணைப்பதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. முகாமிற்கு வரும் பயனாளிகள் தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதார் எண் நகல் கொண்டு வரவும். மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதியாமல் உள்ள பொதுமக்கள் இம்முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.