மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாத இருக்கைகளை ஒன்றிய அரசிடமிருந்து பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அகில இந்திய ஒதுக்கீடு மூலம் மருத்துவ கல்லூரிகளில்  நிரப்பப்படாத இருக்கைகளை ஒன்றிய அரசிடமிருந்து பெற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  தமிழ்நாட்டில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள  கிட்டத்தட்ட 5,125 மருத்துவ இருக்கைகளில், 15% இடங்கள், அதாவது 769 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்படுகின்றன.  இதேபோன்று ஒவ்வொரு மாநில அரசும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு இடங்களை ஒதுக்குகின்றன. இந்த இடங்களை மாணவ, மாணவியருக்கு ஒதுக்கும் பணியினை ஒன்றிய சுகாதாரப் பணிகள் இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய கலந்தாய்வுக் குழு ஒவ்வொரு ஆண்டும் மேற்கொண்டு வருகிறது.   இந்தக் குழு 2021-2022ம் ஆண்டு கல்வியாண்டிற்கான நான்கு கலந்தாய்வுகளை முடித்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான 15 மருத்துவ இடங்கள், சென்னை மருத்துவக் கல்லூரிக்கான இரண்டு இடங்கள், சென்னை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கான ஐந்து இடங்கள், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரிக்கான ஓரிடம் மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கான ஓரிடம் என 24 இடங்கள் இன்னும் அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கப்படாமல் காலியாக உள்ளதாகவும், இது தவிர சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டிற்கான சில இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.  பொதுவாக, இரண்டாவது கலந்தாய்வு முடிந்தவுடன், ஒன்றியக் கலந்தாய்வுக் குழுவினால் நிரப்பப்படாத மருத்துவ இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், இருப்பினும் இந்த ஆண்டு, மருத்துவச் சேர்க்கைக்கான இறுதி நாள் முடிந்த பிறகும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், நிரப்பப்படாத இடங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு இன்னமும் திருப்பி அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன்மூலம் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள இருக்கைகள் உட்பட கிட்டத்தட்ட ஐம்பது தமிழக மாணவ, மாணவியர் மருத்துவம் பயிலும் வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, ஒன்றிய அரசுடன் கலந்தாலோசித்து, அகில இந்திய ஒதுக்கீடு மூலம் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாத மருத்துவ இருக்கைகளை ஒன்றிய அரசிடமிருந்து பெறவும், அவற்றை தமிழ்நாட்டை சேர்ந்தோருக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கவும், மருத்துவச் சேர்க்கை அனுமதிக்கான நாளை நீட்டிக்கவும் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை