செங்கல்பட்டு: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. அதில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை விரிவுரையாளர் கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் மருத்துவ துறையில் பல்வேறு கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அரசு மருத்துவமனையில், ரூ.6.89 கோடியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மைய கட்டிடம், தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை வளாகத்தில் நவீன புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தின் 2ம் தளத்தில் ரூ.2.60 கோடியில் இடைநிலை மேற்பரிசோதனை ஆய்வகம், ரூ.22.00 கோடியில் கொரோனா மற்றும் இதர நோய் தொற்று தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ரூ.11.39 கோடியில், மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மைய கட்டிடம், ரூ.20 லட்சத்தில் திம்மராஜம்பேட்டை துணை சுகாதார நிலைய கட்டிடம், ரூ.20 லட்சத்தில் ஆரப்பாக்கம் துணை சுகாதார நிலைய கட்டிடம், ரூ.25 லட்சத்தில் ஸ்ரீபெரும்புதூர் கலப்பு உயர் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் ஆகியவை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி கட்டிட பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, தேசிய ஊரக திட்டத்தின் கீழ் மருந்து வழங்குபவர் பணி நியமன ஆணை 359 பேருக்கும், 12 முதல் 16 வயது வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி, கண்ணொளி காப்போம் திட்டத்தின்கீழ் 13 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூக்கு கண்ணாடியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.நிகழ்ச்சியில், எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், அரவிந்தரமேஷ், எஸ்.எஸ்.பாலாஜி, மேயர்கள் தாம்பரம் வசந்தகுமாரி, காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், தாம்பரம் துணை மேயர் கோ.காமராஜ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் எஸ்.கணேஷ், கலெக்டர்கள் செங்கல்பட்டு ராகுல்நாத், காஞ்சிபுரம் ஆர்த்தி, பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், இணை இயக்குநர்கள் பொது சுகாதாரம் ஜீவா (காஞ்சிபுரம்), ரமாமணி (செங்கல்பட்டு), செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டீன் முத்துகுமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….