ஈரோடு, ஏப்.2: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் நேற்று ஏராளமான பொதுமக்கள் மனுக்களை வழங்கினர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கமாகும். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கடந்த 3 வாரங்களாக குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படவில்லை. ஆனாலும் பொதுமக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெறுவதற்காக புகார் பெட்டி கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று மாவட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் மனுக்களை கொண்டு வந்து புகார் பெட்டியில் செலுத்திவிட்டு சென்றனர்.