மண்டபம்,ஆக.15: முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில், தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் மரகதப் பூஞ்சோலைகள் அமைக்க 2022-23ம் ஆண்டில் ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தார். அதன்பேரில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 மரகதப் பூஞ்சோலைகள் தலா 1 ஹெக்டேர் பரப்பளவில் அமைப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்டத்தில் ஆற்றாங்கரை மற்றும் அச்சடிப்பிரம்பு ஆகிய இடங்களில் 1 ஹெக்டேர் அளவில் மரகதப் பூஞ்சோலை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த மரகதப் பூஞ்சோலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி மண்டபம் ஆற்றங்கரை ஊராட்சி சேர்வைக்கார ஊரணி பகுதியில் அமைந்துள்ள மரகதப் பூஞ்சோலை பூங்கா வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் ஹேமலதா முன்னிலை வகித்தார்.
ஆற்றாங்கரை பஞ்சாயத்து தலைவர் முகமதுஅலி ஜின்னா வரவேற்றார். கலெக்டர், மரகதப் பூஞ்சோலை பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மண்டபம் ஒன்றிய ஊராட்சிக்குழு தலைவர் சுப்புலெட்சுமி ஜீவானந்தம், மண்டபம் ஒன்றிய மத்திய திமுக செயலாளர் முத்துக்குமார், ஊராட்சி செயலர் கண்ணன், ஜீவானந்தம் மற்றும் மாணவர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.