Thursday, July 4, 2024
Home » மயிலை கபாலீஸ்வரர் கோயில் புன்னைவனநாதர் சன்னதியில் மயில் சிலை மாயம் குறித்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

மயிலை கபாலீஸ்வரர் கோயில் புன்னைவனநாதர் சன்னதியில் மயில் சிலை மாயம் குறித்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

by kannappan

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள புன்னைவனநாதர் சன்னதியில் உள்ள லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் மயில் சிலை இருந்தது. கடந்த 2004ம் ஆண்டு குடமுழுக்கு விழாவிற்கு பிறகு அந்த சிலை மாயமானது. அதற்கு பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது ஆகம விதிகளுக்கு எதிராக உள்ளது. எனவே, புதிய சிலையை அகற்றிவிட்டு, ஏற்கனவே உள்ள சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். கோயில் முறையாக நிர்வகிப்பதை உறுதிசெய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆகம வல்லுனர்கள், சட்டவல்லுனர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மயில் சிலை காணாமல் போனதாக கூறப்படும் 2004ம் ஆண்டு நடத்தப்பட்ட கும்பாபிஷேகம் தொடர்பான 2100 ஆவணங்கள் 2009 மற்றும் 2013ம் ஆண்டுகளில் அழிக்கப்பட்டுவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிலை மாயமானது தொடர்பாக அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் தெரிவித்தார். அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாயமான சிலை இன்னும் மீட்கப்படவில்லை. இதுசம்பந்தமாக விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை மாயமான விவகாரத்தில் உண்மை கண்டறியும் விசாரணை நடந்து வருகிறது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், அசல் மயில் சிலை மாயமானது குறித்த விசாரணையில் ஏற்படும் காலதாமதத்தை ஏற்க முடியாது. வாயில் மலரை கொண்டு அர்ச்சிக்கும் மயில் சிலையை புதிதாக வைக்க வேண்டும். பழைய சிலை மாயமானது குறித்த புலன் விசாரணை மற்றும் உண்மை கண்டறியும் விசாரணை ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை அரசும், அறநிலையத்துறையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு  விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்….

You may also like

Leave a Comment

1 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi