Sunday, October 6, 2024
Home » மயிலாடும்பாறை அருகே பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிப்பு

மயிலாடும்பாறை அருகே பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிப்பு

by kannappan

வருசநாடு : மயிலாடும்பாறை அருகே 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால நெடுங்கற்கள், கற்குவை, கல்வட்டம் ஆகியவற்றை தொல்லியல் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் செல்வம், மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி பள்ளி முதுகலை ஆசிரியர் ரஞ்சித் ஆகியோர் சேர்ந்து மயிலாடும்பாறை பகுதியில் கள ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களின் ஆய்வில், பெருங்கற்கால நினைவுச் சின்னங்களான நெடுங்கற்கள், கற்குவைகள் மற்றும் கல்வட்டம் போன்றவை பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும், அழியாமல் அப்பகுதியில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.இதுகுறித்து தொல்லியல் ஆர்வலரும், ஆசிரியருமான செல்வம் கூறுகையில், இடைக்காலப் பாண்டியர்கள் ஆட்சியில், தேனி மாவட்டம் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருந்தது.அதில் ஒரு பிரிவுதான் வரிசைநாடு, பல ஊர்களை உள்ளடக்கிய வளமான நாடாக வரிசை நாடு இருந்திருக்கிறது. வைகை நதிக்கரையில் அமைந்துள்ள மயிலாடும்பாறை வரிசை நாட்டின் முக்கிய நகரமாக இருந்திருக்கிறது. இடைக்காலத்தில் இவ்வூர் ‘ஒரோமில்’ என அழைக்கப்பட்டதை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.பழம் பெருமை வாய்ந்த ஊரான மயிலாடும்பாறை அருகேதான், தற்பொழுது பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை கண்டுபிடித்து உள்ளோம்.மயிலாடும்பாறை வனத்துறை அலுவலகத்தில் இருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் உள்ளது அந்த பழங்கால மக்களின் வாழ்விடப் பகுதி, அங்கு 10க்கும் மேற்பட்ட நெடுங்கற்கள் குறிப்பிட்ட இடைவெளியில்உ ள்ளது. நெடுங்கற்கள் பெரும்பாலும் மேற்கு திசை நோக்கியே சாய்வாக நடப்பட்டுள்ளன. இது சூரிய வழிபாட்டின் வெளிப்பாடாகவும், திசைகள் குறித்த அவர்களின் மதிப்பீட்டையும், வானிலை கணிக்கும் அறிவையும் உணர்த்துவதாக உள்ளது. கிழக்குப்பக்கம் நடப்பட்டுள்ள ஒரு நெடுங்கல் மற்ற நெடுங்கற்களை விட அகலமாகவும், உயரமாகவும் உள்ளது. அதன் அடிப்பகுதியின் அகலம் மூன்றரை அடியும் உயரம் ஆறரை அடியாகவும் உள்ளது. இந்த நெடுங்கலைச் சுற்றி கல்வட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 2500 ஆண்டுகளுக்கு முன் அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் இறந்த இனக்குழு தலைவனை அடக்கம் செய்து, அங்கு ஒழுங்கற்ற கற்களை அடுக்கி கல்வட்டங்கள் உருவாக்கி, குத்துக்கள் அமைத்து வழிபாடு செய்து வந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.கற்குவைகள் ஆங்காங்கே காணப்படுகிறன. பெருங்கற்கால மக்களின் குடியிருப்புகள் ஓரிடத்திலும், இடுகாடு சற்றுத்தள்ளியும் அமைக்கும் பண்பாடு கொண்டவர்கள். எனவே, இந்த நெடுங்கற்கள் அமைந்துள்ள பகுதிக்கு கிழக்குப்பக்கம் வாழ்வியல் பகுதியாக இருந்திருக்க வேண்டும். இதே பகுதியில் ‘குதிரைக் கட்டி புடவு’ என்னுமிடத்தில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் காணக் கிடைக்கின்றன. மூல வைகை பகுதி பல ஆயிரம் ஆண்டுகள் மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்த பகுதி என்பதற்கான சான்றுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. தமிழகத் தொல்லியல் துறை முறையாக ஆய்வு மேற்கொண்டால் உலக வரலாறு வைகை நதியை நோக்கி திரும்பும் நிலை ஏற்படும், என்றார்….

You may also like

Leave a Comment

2 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi