மயிலாடுதுறை, மே 28: மயிலாடுதுறை நகரில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து கோசாலைக்கு அழைத்துச் சென்று நகராட்சி அதிகாரிகள் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் சங்கர் உத்தரவு பேரில் மயிலாடுதுறை நகரில் விஜிப்ராயர் தெரு , பட்டமங்கல தெரு , காவிரி துலா கட்டம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி அதிகாரிகள் துப்புரவு பணியாளர்கள் மூலம் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பிடிக்கப்பட்ட மாடுகள் அனைத்தையும் சேந்தங்குடி பகுதியிலுள்ள கோசாலைக்கு கொண்டு சென்றனர். மேலும் பிடிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளருக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதித்ததுடன் தொகையை செலுத்திய பின்பு உரிமையாளர்கள் மாட்டினை பெற்றுச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.