ஏற்காடு : ஏற்காடு அருகே செங்கலூத்துப்பாடி கிராமத்தில், மயானத்திற்கு இடம் ஒதுக்காததை கண்டித்து, வீடுகளில் கருப்பு கொடி கட்டி மக்கள் போராட்டம் நடத்தினர்.ஏற்காடு செம்மநத்தம் ஊராட்சி, செங்கலூத்துப்பாடி கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு மயானத்திற்கு தனி இடம் இல்லை. இதனால் இறந்தவர்களை தங்களது நிலத்திலேயே அடக்கம் செய்து வந்தனர். மயான வசதி கேட்டு, பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதை கண்டித்து, கடந்த வாரம் வீடுகளில் கருப்பு கொடி கட்டி மக்கள் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, மயானத்திற்கு நிலம் ஒதுக்குவதாக உறுதி கூறியதன் பேரில், போராட்டத்தை கைவிட்டனர். இதை தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன் செங்கலூத்துப்பாடி பகுதியில் மயானத்திற்கான இடத்தை அதிகாரிகள் கண்பித்தனர். அப்போது அந்த இடம் மேடாக உள்ளதால், சடலங்களை அடக்கம் செய்ய முடியாது என மக்கள் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மயானத்திற்கு நிலம் ஒதுக்காததை கண்டித்து, வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, மீண்டும் நேற்று வீடுகளின் முன் கருப்பு கொடியை கட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் பொன்னுசாமி, டிஎஸ்பி உமாசங்கர், இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர், 3 நாட்களில் மயானத்திற்கு இடம் ஒதுக்குவதாக உறுதி கூறியதன் பேரில், மக்கள் போராட்டத்தை கைவிட்டு, கருப்பு கொடிகளை அகற்றினர்….