சென்னை: மன அழுத்தம், உணவு, மது உள்ளிட்ட பழக்க வழக்கத்தால், மாரடைப்பால் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்தியாவில் மாரடைப்பு தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு தாக்கம் அதிகளவில் ஏற்பட்டு வந்தது. கடந்த 5 வருடங்களாக 40 வயதுக்கும் குறைவான இளைஞர்களுக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை இருதய நோய் பிரிவு டாக்டர்கள் கூறியதாவது: மாரடைப்பால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, 30 முதல் 40 வயதுடைய இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஐடி ஊழியர்கள், டிரைவர்கள், சிறுவயதிலேயே மன அழுத்தம் தரக்கூடிய வேலையில் சேர்ந்தவர்கள், மது, புகை பழக்கம் உடையர்கள் என அனைவருமே பாதிக்கப்படுகின்றனர். அதேநேரத்தில், ஒரு மனிதனுக்கு 6 முதல் 7 மணி நேரம் தூக்கம் என்பது மிகவும் அவசியம். ஆனால், இளைஞர்கள் தூக்கத்தை மறந்து விட்டு, வேலைக்குச் சென்று விடுகின்றனர். இதனால் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, அவர்களுக்கு புகை, மது பழக்கம் ஏற்படுகிறது.மேலும், இளைஞர்கள் உணவு பழக்கத்தை முற்றிலும் மாற்றிக் கொள்கின்றனர். பாஸ்ட் புட், மேற்கத்திய உணவுகளை அதிகளவில் விரும்பி, வாரத்திற்கு ஒரு முறையேனும் சாப்பிடுகின்றனர். இதுபோன்ற பழக்கத்ததால் பல்வேறு நோய் பாதிப்பு ஏற்பட்டு, மாரடைப்பு வழிவகை செய்கிறது. மேலும், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகிறது. மாரடைப்பை தடுக்க தினமும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வாகன பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். மது, புகை பழக்கத்தை தவிர்க்க வேண்டும். தினமும் 6 முதல் 7 மணி நேரம் தூங்க வேண்டும். இவ்வாறு டாக்டர்கள் கூறினர்….
மன அழுத்தம், உணவு, மது பழக்கத்தால் இளம் வயதிலேயே மாரடைப்பு அதிகரிப்பு: டாக்டர்கள் எச்சரிக்கை
previous post