பெங்களூரு: கடந்த 2018ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் ககன்யான் திட்டத்தை அறிவித்தார். இதைத்தொடர்ந்து இஸ்ரோவின் சார்பில் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தன. விண்வெளிக்கு செல்லும் நபர்கள் தேர்வு முடிந்த நிலையில் ரஷ்யாவில் அவர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே ககன்யான் திட்டத்திற்கு முன்னோடியாக அதாவது மனிதர்கள் விண்கலத்தில் அனுப்பி வைத்து அவர்களை மறுபடியும் பூமிக்கு அழைத்து வருவதற்கு பதில் ஆளில்லாத விண்கலத்தை பரிசோதனை செய்யும் முயற்சியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக உதிரிபாகம் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை என்றாலும் விஞ்ஞானிகள் இத்திட்டத்திற்கான மற்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் கூறுகையில், ‘‘விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை நிர்ணயம் செய்த காலத்திற்குள் அமல்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. அடுத்த வருடம் ஆகஸ்ட் மனிதர்களை விண்ணிற்கு அனுப்ப வேண்டும் என அரசு நிர்ணயித்துள்ளது. கொரோனாவால் இத்திட்டம் அமல்படுத்த தாமதம் ஏற்பட்டிருந்தாலும் திட்டமிட்டப்படி “ககன்யான்” விண்ணில் செலுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொண்டுவருகிறோம்’’என்றார்….