கோவை, செப்.24: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆலாந்துறை சேர்ந்த காயத்ரி என்பவர் அளித்த மனுவில், ‘‘நான் கடந்த 10 மாதங்களாக ஆலாந்துறை பகுதியில் உள்ள எனது தாய் வீட்டில் வசித்து வருகிறேன். இந்நிலையில், கடந்த 8 மாதங்களாக எனது ஸ்மார்ட் ரேஷன் கார்டை போலியாக தயாரித்து ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த ஜெராக்ஸ் கார்டிற்கு பொருட்கள் மத்துவராயபுரம் நியாயவிலைக்கடையில் வழங்கி வருகின்றனர்.
இது குறித்து நியாயவிலை கடை அலுவலரிடம் கேட்டால், மிஷினில் ஸ்கேன் ஆனால் நாங்கள் பொருள் கொடுப்போம் என கூறுகிறார். இது குறித்து இலவச உதவி மைய எண்ணில் புகார் அளித்தால், பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க கூறினர். தமிழக அரசின் முத்திரையுடன் ஜெராக்ஸ் தயாரித்து போலி கார்டுகள் மத்துவராயபுரத்தில் அதிகளவில் உள்ளது. ஒரே கதவு எண்ணில் இரண்டு ஸ்மார்ட் கார்டுகள் இருக்கிறது. எனவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.