ராமநாதபுரம்,: மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் படிக்கும் ராமநாதபுரம் மாவட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஐஐடி, ஐஐஎம், என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்தால், 2020-21ம் கல்வி ஆண்டிற்காக கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். முதல் கட்டமாக 100 மாணவ, மாணவிகளுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வி உதவித்தொகை பெற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களாகவும், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருப்போர் தகுதியானவர்கள். புதிதாக கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணிமாறனை அல்லது அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெறலாம். இக்கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கத்தின், இயக்குநர் அலுவலகத்திற்கு வரும் பிப்.15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்….