டெல்லி: மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ள விவசாய சங்கங்கள் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்தும் வகையில் சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லி எல்லைகளில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் நடைபெற்ற 11 கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில் டெல்லி வன்முறை சம்பவங்களை அடுத்து இனி விவசாயிகளுடன் பேசப்போவதில்லை என மத்திய அரசு அறிவித்தது. விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்ததை அடுத்து டெல்லியின் எல்லைகள் தடுப்புகளால் மூடப்பட்டன. இந்நிலையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய பிரதமர் திரு மோடி விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திறந்த மனதுடன் தயாராக உள்ளதாக கூறினார். வேளாண் சட்டங்களால் விவசாயிகள் நன்மை அடைவார்கள் என்று தெரிவித்த அவர், விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனிடையே டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க நிர்வாகிகள் குறைந்த பட்ச ஆதார விலை தொடரும் என்று மத்திய அரசு பல முறை கூறினாலும் அதற்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க முன்வரவில்லை என்று குற்றம் சாட்டினர். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறிய அவர்கள் தேதியை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர். போராட்ட களத்தில் தொழிமுறை போராளிகள் நுழைந்திருப்பதாக பிரதமர் திரு மோடி கூறியதை ஏற்க முடியாது என்று விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர். அரசின் தவறான திட்டங்களை எதிர்த்து போராட ஜனநாயக நாட்டில் மக்களுக்கு உரிமை உள்ளதாக அவர்கள் கூறினர்.மத்திய அரசு அழைக்கும் போதெல்லாம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தெரிவித்த விவசாய சங்க நிர்வாகிகள் வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். …