அண்ணாநகர்: சென்னை முகப்பேர் பகுதி சாலையில் நேற்று முன்தினம் கார் ஒன்று அதிவேகமாக சென்றது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், அந்த காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அதில் இருந்து கீழே இறங்கிய நபர், தள்ளாடியபடி, அருகில் உள்ள கடைக்கு செல்ல முயன்றார். அவரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள், இதுபற்றி நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போதையில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ‘‘நான் யார் தெரியுமா, என்னிடமே கேள்வி கேட்பீர்களா’’ என போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை நொளம்பூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அம்பத்தூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் (40) என்பதும், திருவல்லிகேணி காவல் நிலையத்தில் போக்குவரத்து தலைமை காவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதுபற்றி திருமங்கலம் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து கிருஷ்ணகுமாரை பரிசோதித்தபோது, மது போதையில் இருப்பது உறுதியானது. இதையடுத்து, தலைமை காவலர் கிருஷ்ணகுமார் மீது வழக்கு பதிவு செய்து, அவரது காரையும் பறிமுதல் செய்தனர். …