ஊத்தங்கரை, ஜூன் 25: ஊத்தங்கரை போலீசார் காரப்பட்டு அருகே உள்ள அருணபதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அந்த பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மணிலா (56) என்பவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்கு வைத்திருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், மது விற்ற எளச்சூர் கிராமத்தை சேர்ந்த உத்திரகுமார்(36) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 9 மதுபாட்டில்களையும், காரப்பட்டு கிராமத்தில் பெருமா (68) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 8 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மத்தூர் போலீசார், மாதம்பதி பகுதியில் ரோந்து சென்ற போது, மதுவிற்ற சங்கர் (45) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களையும், சாமல்பட்டி போலீசார், காந்திநகர் பகுதியில் மதுவிற்ற லலிதா (53) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.