மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய 60 வயதை தாண்டியவர்கள், 10 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அனுமதி ரத்து உள்ளிட்ட புதிய வழிகாட்டு முறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் விடுத்துள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் தற்போதைய நிலையில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், ஏற்கனவே உள்ள வழிகாட்டு முறைகளோடு, மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, இன்று (ஏப்.15) முதல் வரும் 30ம் தேதி வரை, காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை (பூஜை காலங்கள், திருவிழா புறப்பாடு காலங்கள் நீங்கலாக) பக்தர்கள் அம்மன் சன்னதி கிழக்கு நுழைவாயில் வழியாக மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ரூ.100 மற்றும் ரூ.50 சிறப்பு தரிசனக் கட்டணச்சீட்டு பெறும் பக்தர்கள் தெற்கு கோபுர நுழைவு வாயிலில் அனுமதிக்கப்படுவர். மேற்கு, வடக்கு கோபுர வாயில்களில் அனுமதி கிடையாது. மேலும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். வெப்பநிலை பரிசோதனை, கிருமிநாசினி மூலம் கைகள் சுத்தம் செய்தபிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். 10 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு கோயிலுக்குள் செல்ல அனுமதியில்லை. செல்போன் கொண்டு வர அனுமதியில்லை. தேங்காய், பழம் கொண்டுவரவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை. பொது தரிசனத்திற்கு வருபவர்கள், அம்மன் சன்னதி கிழக்கு வாயிலுக்குள் நுழைந்து, அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், இருட்டு மண்டபம், பொற்றாமரைக்குள கிழக்குப்பகுதி, தெற்குப்பகுதி, மற்றும் கிளிக்கூண்டு மண்டபம், கொடிமரம் வழியாக அம்மன் சன்னதிக்குள் நுழைந்து தரிசனம் செய்லாம். கட்டண தரிசனம் செய்பவர்கள், தெற்கு வாயில் வழியாக கிளிக்கூண்டு மண்டபம், கொடிமரம் வழியாக அம்மன் சன்னதிக்குள் நுழைந்து தரிசனம் செய்யலாம். தரிசனம் முடித்தவர்கள் சுவாமி சன்னதி சென்று தரிசனம் செய்து, சனீஸ்வரர் சன்னதி அக்னி வீரபத்திரர், அகோர மண்டபம் வழியாக அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக வெளியே செல்லவேண்டும். கோயிலுக்குள் பக்தர்கள் உட்கார அனுமதி இல்லை. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்….