திருப்பரங்குன்றம், ஆக. 10: மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல குழு கூட்டம், திருப்பரங்குன்றத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மண்டல குழு தலைவர் சுவிதா விமல் தலைமை வகித்தார், உதவி ஆனையாளர் ராதா, உதவி செயற்பொறியாளர்கள் முத்து, சுப்பிரமணி, சுகாதார அலுவலர் விஜயகுமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு, தங்கள் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு பணிகள் குறித்த கோரிக்கைகளை முன் வைத்தனர். இது குறித்து பதிலளித்த மண்டல தலைவர் சுவிதா விமல், ‘‘மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை விரைந்து செய்து முடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.