மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிமுக பகுதி செயலாளரிடம் இருந்து 26 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பணம் விநியோகம் உள்ளிட்ட விதிமீறல்களை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பகுதி செயலாளரிடம் ரூ.26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவனியாபுரம் அதிமுக பகுதி செயலாளராக இருப்பவர் முருகேசன். இவருக்கு சொந்தமான எஸ்.எம்.டி. கல்யாண மகள் அப்பகுதியில் உள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அச்சமயம் அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் ரூ.26 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும்படையினர் விசாரணை செய்த போது இப்பணமானது அதிமுக பகுதி செயலாளர் முருகேசனுக்கு சொந்தமானது தெரியவந்தது. தொடர்ந்து கைப்பற்றப் பணம் 26 லட்சத்தை திருப்பரங்குன்றம் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளரை ஆதரித்து வில்லாபுரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இத்தகைய பெருந்தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. …