மதுரையில் வழிப்பறிக்காக ஆயுதங்களுடன் சுற்றிய 3 வாலிபர்கள் கைது

மதுரை, ஏப். 30: மதுரை, ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சோலையழகுபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த மூன்று வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர்.  அவர்கள் மூன்று பேரும் தலா ஒரு வாளை தங்கள் உடைக்குள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், போலீசாரிடம் சிக்கியவர்கள் மதுரை, ராமமூர்த்தி நகரை சேர்ந்த சூர்யா (20), சோலையழகுபுரம் கார்த்திகேயன் (20) மற்றும் விஜயகுமார் (21) என்பது உறுதியானது.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது அவர்கள் சாலையில் தனியாக நடந்தும், வாகனங்களிலும் செல்வோரை மடக்கி வழிப்பறி செய்வதற்காக ஆயுதங்களுடன் சுற்றி வந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வாலிபர்கள் மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மூவரும், மாஜிஸ்திரேட் உத்தரவின்படி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி