மதுராந்தகம்,அக். 2: மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி ‘குப்பை இல்லா இந்தியா’ என்ற தலைப்பில், மதுராந்தகம் நகராட்சியில் உள்ள தேரடி வீதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் மலர்விழிக்குமார் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் சுதர்சன் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். இதில், மன்ற உறுப்பினர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு தூய்மை உறுதிமொழி ஏற்று தேரடி தெருவில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல், கருங்குழி பேரூராட்சியில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சங்கீதா சங்கர் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் அனைவரையும் வரவேற்றார். இதில் மேலவலம்பேட்டை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் ஒன்றியம் கள்ளபிரான்புரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அரசு அலுவலகங்கள், ஊராட்சியில் உள்ள பொது இடங்கள், தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா தனசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு உள்ளிட்ட அரசு அதிகாரிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டு, தூய்மை பணி குறித்த உறுதிமொழி ஏற்றனர்.