மதுபோதை தகராறில் பிரபல ரவுடிக்கு சரமாரி வெட்டு: 3 பேர் கைது

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி பாலீஸ்வரன் கண்டிகை பகுதியில் நேற்று அதிகாலை வாலிபர் வெட்டு காயங்களுடன் கிடப்பதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மீட்டு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தியதில், பாலீஸ்வரன்  கண்டியை சேர்ந்த பாஸ்கர்(எ) டிஸ்க் பாஸ்கரன்  என்பதும், இவர் மீது ஏற்கனவே பல கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. மேலும், இரண்டு முறை குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்துள்ளார். இந்நிலையில், பாஸ்கர் நேற்று  முன்தினம் இரவு கும்மிடிப்பூண்டி பஜார் காந்தி நகர் பகுதியை சேர்ந்த ஜெகன்(27), கார்த்திக்(28), சிந்தலகுப்பம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார்(31) ஆகியோருடன் விடிய விடிய மது அருந்தியுள்ளார். அப்போது, மதுபோதையில் ஜெகன் உள்ளிட்டோர் டிஸ்க் பாஸ்கரனுடன், `நீ பெரியவனா அல்லது நான் பெரியவனா’ என்பது தொடர்பாக வாய்த்தகராறில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில் அரிவாளால் பாஸ்கரை சரமாரியாக  தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து, சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகன், கார்த்திக், பிரேம்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக சிலரிடம் விசாரணை நடந்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஜெகன் ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

கோயம்பேடு சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியவர் கைது