சேலம், ஜூன் 24: சேலம் மாநகரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாநகர பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து, சந்து கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம், மாநகர் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில், மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த கொண்டலாம்பட்டியை சேர்ந்த சக்திவேல் (46), அழகாபுரத்தை சேர்ந்த நாகம்மாள் (67), கருப்பூரை சேர்ந்த கோவிந்தராஜ் (55), ஈஸ்வரன் (70), அழகாபுரம் நரசோதிப்பட்டியை சேர்ந்த அமுதா (50) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், காரிப்பட்டி அருகே உள்ள அறுநூத்துமலை ஆலடிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆனந்தன் (29) என்பவர், தனது வீட்டில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காரிப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்ஐ ராஜசேகரன் தலைமையிலான போலீசார், அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு 42 மதுபாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆனந்தனை கைது செய்து, சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்
அடைத்தனர்.