மண் சாலை அமைக்க எதிர்ப்பு; விவசாயி தர்ணா

நல்லம்பள்ளி, ஜூன் 16: நல்லம்பள்ளி அருகே பட்டா நிலத்தில் மண் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் முன் அமர்ந்து விவசாயி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நல்லம்பள்ளி அருகே, சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி கமலநத்தம் கிராமத்தில், சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், அப்பகுதியைச் சேர்ந்த சிலர், போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் கொண்டு சாலை அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த விவசாயி ஒருவர், திடீரென போராட்டத்தில் குதித்தார். தனது பட்டா நிலத்தில் சாலை அமைப்பதை தவிர்த்து, வட்டார வளர்ச்சி அலுவலரின் ஆவணப்படி அளந்து, முறையாக மண்சாலை அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்து, மீண்டும் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டனர். இதனால், விரக்தியடைந்த விவசாயி, பொக்லைன் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பிடிஓ ஆவணப்படியே அளந்து, சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதனையடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு விவசாயி அங்கிருந்து எழுந்து சென்றார். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை