சேலம், அக்.1: கெங்கவல்லி அருகே மண், கற்களை வெட்டி கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. கெங்கவல்லி அடுத்த கோனேரிப்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறுகையில், ‘‘கோனேரிப்பட்டி பெருமாள் மலையின் அடிவாரத்தில் 30 அடி ஆழம் வரை தோண்டி, மண் மற்றும் கற்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. அத்துடன் 1,000க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்க சென்றபோது, சிலர் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் பல கோடி மதிப்பிலான இயற்கை வளங்கள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.