குளச்சல், ஜூன் 15: மண்டைக்காடு அருகே கொத்தனார்விளையை சேர்ந்தவர் தங்கத்துரை. அவரது மகன் குமார் (38). ஆட்டோ ஓட்டுனர். கடந்த ஆண்டு மணிகண்டன் என்பவரிடம் இருந்து ஆட்டோவை விலைக்கு வாங்கி ஓட்டி வந்தார். இந்தநிலையில் குமார் சம்பவத்தன்று மதியம் தனது ஆட்டோவை வீட்டு முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். மாலையில் வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை. யாரோ மர்ம நபர் ஆட்டோவை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து குமார் உடனே குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான ஆட்டோவை தேடி வந்தனர். இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் குமாருக்கு சொந்தமான ஆட்டோவை குறும்பனை பகுதியை சேர்ந்த சுதன்ராஜ் என்ற டிக்சன் (35) என்பவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து சுதன்ராஜை கைது செய்த போலீசார் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சுதன் ராஜ் என்ற டிக்சன் குமரி மாவட்ட பாஜ மீனவரணி செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.