கோபி, ஜூலை 24: மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய ஒன்றிய அரசையும், மணிப்பூர் மாநில அரசையும் கண்டித்து இன்று (24ம் தேதி) ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில் பலரும் உயிரிழந்த நிலையில், பெண்களை நிர்வாணப்படுத்தும் அளவிற்கு வன்முறைகள் நடந்த போதும், கலவரத்தை தடுக்க தவறிய அம்மாநில அரசையும், ஒன்றிய அரசையும் கண்டித்து இன்று ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், ஊராட்சி கழக நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மகளிர் அணியினர், கூட்டுறவு உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.