கரூர், ஜூன் 9: மணவாடி ஊராட்சியில் விதவைப் பெண்களுக்கு இலவச கறவை மாடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தாந்தோணி ஒன்றியம் மணவாடி ஊராட்சி பெருமாள் பட்டி காலணியில் விதவைப் பெண்களுக்கு கரூர் வைசியா வங்கி சார்பில் இலவச கறவை மாடு வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஏ. பி. கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மணவாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கணவனை ஏழைப் பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 4 பெண்களுக்கு தலா ரூ.40 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பு 4 கறவை மாடுகள் கரூர் வைசியா வங்கி துணை மேலாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு பெண்களுக்கு கறவை மாடு வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ஏ.பி.கந்தசாமி பேசியதாவது, கரூர் வைசியா வங்கி நமது கிராமத்தை தத்தெடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் தொழில் பயிற்சிகள், பண்ணை குட்டைகள் அமைத்தல், மின்சார வசதி இல்லாத பகுதிகளுக்கு சூரிய ஒளி மூலம் தெருவிளக்கு அமைத்தல், ஏழை விதவைப் பெண்களின் மறு வாழ்விற்காக கரூர் வைசியா வங்கி நேரடியாக பயனாளிகளை தேர்வு செய்துள்ளது .
கறவை மாடுகளை பெற்றுள்ள பெண்கள் முறையாக பராமரித்து தங்கள் குடும்ப வருமானத்தை பெருக்க வேண்டுமென்று தெரிவித்தார். ஹேண்ட் இன் ஹேண்ட் துணைத் தலைவர் கண்ணன், தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார், ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.