வைகுண்டம், டிச.13: வைகுண்டம் அருகே மணல் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வைகுண்டம் எஸ்ஐ சேவியர் பிராங்க்ளின் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். இதில் பொன்னன்குறிச்சி ஆற்றங்கரை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் வைகுண்டம் வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் சிவா (எ) சிவலிங்கம் (26) என்பதும், 20 சாக்கு மூடைகளில் ஆற்று மணலை திருடி பதுக்கிவைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிந்து அவரை கைதுசெய்தனர். கைதான சிவா (எ) சிவலிங்கம் மீது ஏற்கனவே வைகுண்டம் காவல் நிலையத்தில் மணல் திருட்டு, திருட்டு வழக்குகள் உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.