பெரணமல்லூர், ஆக.5: பெரணமல்லூர் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 மாட்டு வண்டிகளை சேத்துப்பட்டு தாசில்தார் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தார். பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம், அன்மருதை, முனுகப்பட்டு, கடுகனூர் பகுதி வழியே செல்லும் செய்யாற்று படுகையில் மாட்டு வண்டிகள் மூலம் அதிக அளவு மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக பொதுமக்கள் பெரணமல்லூர் போலீசில் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை சேத்துப்பட்டு தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள் செய்யாற்று படுகை பகுதியில் மணல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது முனுகப்பட்டு வழியே வந்த மாட்டு வண்டிகள் மடக்கி சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தாசில்தார் வெங்கடேசன் மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்து பெரணமல்லூர் போலீசில் ஒப்படைத்தார். மேலும் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.