புதுடெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக டெல்லியின் எல்லைப் பகுதிகளான நொய்டா, காசியாபாத், திக்ரி, சிங்கு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளை மறித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக நொய்டா பகுதியை சேர்ந்த மோனிகா அகர்வால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘விவசாயிகள் சாலையை மறித்து போராட்டம் நடத்துவதால் வீட்டில் இருந்து டெல்லியில் உள்ள எனது அலுவலகத்திற்கு செல்ல 2 மணி நேரத்திற்கும் மேலாகிறது. அதனால் உடனடியாக போராட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, ‘‘இந்த விவகாரத்தில் மனுதாரர் சில முக்கியமான பிரச்னைகளை கூறியிருக்கிறார். போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காக சாமானியர்கள் பாதிக்கப்படக் கூடாது. இதில் முடிவு எடுக்க வேண்டியது ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தான். எனவே சம்பந்தப்பட்ட மாநில அரசுகளான உத்தரப் பிரதேசம் மற்றும் அரியானா ஆகியவை உடனடியாக மாற்று வழியை மேற்கொள்ள வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்….