காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெற்றபட்ட 357 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் கலைச்செல்வி மோகன், அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நேற்று காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.
இதில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து 357 மனுக்களை பெற்றார். பின்னர், இம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், அனைத்துத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.