சென்னை: மின்சார கட்டணம் என்ற பெயரில் குறுந்தகவல் மூலம் மோசடி நடைபெறுவதாக டிஜிபி சைலேந்திரபாபு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தொலைபேசி மூலமாக இணையதள மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்றாக தற்போது மின்கட்டணம் மோசடி அரங்கேறி வருகிறது. இன்றிரவுக்குள் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுந்தகவல் வந்தால் நம்பவேண்டாம். ரூ. 10 செலுத்தினால் பிரச்சனை ஏற்படாமல் பார்த்து கொள்வதாக குறுந்தகவல் வருவதை பொருட்படுத்த வேண்டாம். நாங்கள் அனுப்பும் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து ரூ.10 செலுத்தினால் பிரச்சனை மீண்டும் ஏற்படாது என்று கூறுவர். செயலி மூலம் ரூ.10 அனுப்பினால் வங்கி கணக்கு விவரங்களை திருடி மோசடி நபர்கள் பணத்தை எடுத்துக் கொள்வர். தப்பி தவறி கூட அவர்கள் சொல்லும் ஆப்பை நீங்கள் டவுன்லோடு செய்யாதீர்கள். ஒரு வேளை டவுன்லோடு செய்தால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து சிறுக சிறுக அந்த நபர்களுக்கு பணம் சென்று கொண்டே இருக்கும். சமீப காலமாக மின்கட்டண பெயரில் மோசடி நடக்கிறது. இது மிகவும் ஆபத்தான மோசடி என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். யாராவது மெசேஜ் அனுப்பினால் காவல் துறைக்கு தகவல் அளியுங்கள். 100, 112 உள்ளிட்ட எண்களுக்கு தகவல் கொடுங்கள். மோசடி நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது, மக்கள் உஷாராக இருக்குமாறும் டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். …