தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி நேற்று வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவில் தொடங்கி, முத்தையா முதலி தெரு, தங்கவேல்பிள்ளை தோட்டம், ஜமால் சவுகார் தெரு, டி.பி.கே.தெரு, முனிராம் பாண்டியன் தெரு, சுப்பம்மாள் தெரு, நடராஜ முதலி தெரு உள்ளிட்ட பகுதியில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். அப்போது மக்களிடையே அவர் பேசுகையில், ‘தமிழகத்தில் அதிமுக அடிமை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அச்சாரமாக ராயபுரத்தில் எனக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள். பொதுமக்கள் நீங்கள் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும். நான் இதே தொகுதியில் வசிப்பவன். தொகுதி மக்களின் பிரச்னைகளை அறிந்தவன். உங்கள் பிரச்னைகளை எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தெரிவிக்கலாம். உடனடியாக சரிசெய்து கொடுப்பேன். இந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை, கழிவுநீர் பிரச்னை, சாலையில் தேங்கியுள்ள குப்பை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை உடனடியாக தீர்த்து வைப்பேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னையை முன்னின்று தீர்க்கும் அரசு என்றால் திமுக அரசுதான்,’ என்றார். ராயபுரம் தொகுதி பொறுப்பாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம், மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, பகுதி செயலாளர்கள் சுரேஷ், செந்தில் உள்ளிட்ட திமுகவினர், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்….