கிருஷ்ணராயபுரம், ஜூன் 20: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே லாலாப்பேட்டை கடைவீதி மகா மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 16ம்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து உபயதாரர்கள் சார்பில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி நேற்று நடைபெற்றது. இதில் 25 அடி உயரமுள்ள தூக்கு தேரில் மாலைகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். பின்னர் தேரை இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் தங்களது தோளில் தூக்கி கொண்டு கொடிக்கால் தெரு, அக்ரஹாரம், பழைய கரூர் மெயின்ரோடு, புதுத்தெரு, மெயின்ரோடு, கீழவிட்டுக்கட்டி ஆகிய வீதியின் வழியாக ஊர்வலமாக வலம் வந்தனர். பின்னர் தேர் நிலைக்கு வந்த பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று (20ம்தேதி) முதல் 24ம்தேதி வரை தினமும் மதியம் மற்றும் மாலையில் உபயதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. வரும் 24ம்தேதி கரகம் மஞ்சள் நீராடுதலுடன் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை விழா குழுவினர், தேவஸ்தானம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
மகா மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 25 அடி உயர தூக்கு தேரை தோளில் சுமந்து ஊர்வலம்
previous post