மகள் இறந்த சோகம்; தாய், தந்தை தற்கொலை: உடல்களை மீட்டு போலீசார் விசாரணை

திட்டக்குடி: திட்டக்குடியில் மகள் இறந்த சோகத்தில், விஷம் குடித்து தாய், தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் பாரதி (52). மனைவி ராஜேஸ்வரி (42). இவர்களுக்கு லாவண்யா (25), ஜெயந்தி (22) ஆகிய மகள்கள் உள்ளனர். இருவரும் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். இவர்களில் மூத்த மகள் லாவண்யா கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, தான் புதிதாக வாங்கிய மொபட்டை விருத்தாசலத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய தனது உறவினருடன் சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கி இருவரும் பரிதாபமாக இறந்தனர். லாவண்யா மீது பெற்றோர் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்ததால் அவரது இழப்பை தாங்க முடியாமல் தவித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை வெகுநேரமாகியும் இருவரும் படுக்கையில் இருந்து எழும்பவில்லை. உடனே ஜெயந்தி சென்று பார்த்துள்ளார். இருவரும் மூச்சு, பேச்சின்றி கிடந்தார். அருகில் காலியான விஷபாட்டில் கிடந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, இருவரையும் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர், இருவரும், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து திட்டக்குடி போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது….

Related posts

சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

கழுகுகள் இறப்புக்கு காரணமான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்