புழல்: புழல் அருகே நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற மகளிர் தின விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுயஉதவி குழுவினருக்கு மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ பரிசுகள் வழங்கி பாராட்டினார். புழல் அருகே கிராண்ட்லைன் ஊராட்சி அனைத்து மகளிர் குழு சார்பில், நேற்று முன்தினம் மாலை தண்டல்கழனியில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மகளிர் சுயஉதவி குழு தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். புழல் ஒன்றியக்குழு தலைவர் தங்கமணி திருமால், புழல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வேதநாயகம், மாவட்ட கவுன்சிலர் சதீஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில், அனைத்து மகளிர் குழு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்….