மகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தந்தைக்கு ஆயுள் தண்டனை போக்சோ கோர்ட் பரபரப்பு தீர்ப்பு கீழ்பென்னாத்தூர் அருகே தாயை இழந்த

திருவண்ணாமலை, ஜூன் 8: தனது சொந்த மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கொடூர தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் சேகர்(51). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஒரு மகனும், ஒரு மகளும் தந்தையின் பராமரிப்பில் இருந்தனர். இந்நிலையில், தாயை இழந்து தன்னுடைய பராமரிப்பில் இருந்த மகளை மிரட்டி, தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் தந்தை சேகர் ஈடுபட்டுள்ளார். அதேபோல், கடந்த 1.12.2021 அன்று மது போதையில் இருந்த சேகர் மகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். நடந்த கொடுமையை வெளியில் சொன்னால், கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

அதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி, வெளியூரிலிருந்து தன்னைப் பார்க்க வந்த சித்தியிடம் தனக்கு நடைபெறும் கொடூரத்தை கண்ணீருடன் தெரிவித்தார். அதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் சித்தி, இதுகுறித்து திருவண்ணாமலை மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமியை மீட்டு திருவண்ணாமலை காப்பகத்தில் சேர்த்தனர். மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் சேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியில் வந்தால், புகார் அளித்த மகளுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை போக்சோ வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமிகள் தரப்பில், அரசு சிறப்பு பொது வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜரானார். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதன்படி, 11 வயதுள்ள தன்னுடைய சொந்த மகளிடம், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தந்தை சேகருக்கு, ஆயுள் தண்டனை விதித்து போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதி பெ.பார்த்தசாரதி பரபரப்பு தீர்ப்பு அளித்தார். மேலும், ₹5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு தரப்பில் ₹5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த சேகரை, போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு