கோவை: கோவையில் மகனை காதல் திருமணம் செய்த பெண்ணை மத மாற்றம் செய்தது தொடர்பாக, நகைப்பட்டறை உரிமையாளரை கொல்ல முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் குமரேசன் (55). தங்க நகைப்பட்டறை உரிமையாளர். இவரது மகன் அருண்குமார் (27). இவர் ஐதராபாத்தில் ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், திருவாரூரை சேர்ந்த சகானா அன்மிகாவை (26) கடந்த செப்டம்பரில் காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் கோவை செல்வபுரத்தில் வசித்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்தபடியே அருண்குமார் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சகானா அன்மிகா வேறு மதத்துக்கு மாறியதாக தெரிகிறது. இதுபற்றி ஒரு வாட்ஸ் அப் குழுவில் காதல் திருமணம் செய்த பெண் மதம் மாறிய விவகாரம் குறித்து தகவல் பகிரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த குழுவில் இருந்த ஈரோட்டை சேர்ந்த முகமது அலி ஜின்னா (52), திருச்சியை சேர்ந்த இம்ரான் கான் (45), சதாம் உசைன் (27), சென்னையை சேர்ந்த பக்ருதீன் (42), உ.பியை சேர்ந்த ராம்வீர் (23) ஆகிய 5 பேர் குமரேசனை கொலை செய்வதற்காக வடமாநிலத்தில் இருந்து துப்பாக்கி வாங்கி வந்திருப்பதாக தெரியவந்தது. முன்னதாக இவர்கள் வாட்ஸ் அப் குழுவில் சில மிரட்டல் தகவல்களை பகிர்ந்துள்ளனர். இந்த தகவல் செல்வபுரம் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்து, துப்பாக்கி, அரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு பணம் கொடுத்து கொலை செய்யச் சொல்லி சிலர் திட்டமிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இவர்களது தகவலின்படி மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்….