போளூர் அருகே நகை, பணம் கொள்ளையில் திருப்பம் மாமியாரை மருமகளே கத்தியால் குத்திக்கொன்றது அம்பலம்: போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

போளூர்: போளூர் அருகே மூதாட்டியை கத்தியால் குத்திக்கொன்று நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அவரது மருமகளே மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த புலிவானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் காசியம்மாள்(85). இவரது கணவர் சின்னதம்பி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மூத்த மகன் செல்வம் (65), 2வது மகன் ராஜீ(60) ஆகியோரும் அடுத்தடுத்து இறந்துவிட்டனர். 3வது மகன் சின்னபையன்(56), தனது மனைவி குமாரி மற்றும் பிள்ளைகளுடன் அதே ஊரில் வசித்து வருகின்றார். யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் மூதாட்டி காசியம்மாள் கிராமத்தில் உள்ள பாழடைந்த சமுதாய கூடத்தில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி இரவு மூதாட்டி கழுத்தில் 3 இடங்களில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். மேலும் அவரது கம்மல், மூக்குத்தி என ஒன்றரை சவரன் நகைகள், இரும்பு பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து போளூர் போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகளை பிடிக்க தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, காசியம்மாளின் மூத்த மருமகள் தேவகி(58), இந்த கொடூர கொலையை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட மூதாட்டி காசியம்மாள் பெயரில் 2 ஏக்கர் 80 சென்ட் நிலம் உள்ளது. இதில் தங்கள் குடும்பத்துக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தரும்படி மூத்த மருமகள் தேவகி, தனது மாமியார் காசியம்மாளிடம் கேட்டு அடிக்கடி சண்டை போட்டுள்ளார். அப்போது, சொத்தை பாகம் பிரித்து தரமுடியாது என காசியம்மாள் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தேவகி  கடந்த 2ம் தேதி நள்ளிரவில் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து தூங்கிக்கொண்டிருந்த மாமியாரின் கழுத்தில் 3 முறை குத்தி கொலை செய்தாராம். பின்னர், அந்த கத்தியை அருகே கோயில் பின்புறம் போட்டுவிட்டு சென்றுள்ளார். மேலும் நகை, பணத்தையும் எடுத்து சென்றுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். நகை, பணம் மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். மாமியாரை மருமகளே கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தை, மகன் உள்பட 3 பேர் கைது

கள்ளக்காதலியை அரசு அதிகாரி என கூறி போலீஸ் ஏட்டு மெகா மோசடி 30 தொழிலதிபர்களை ஏமாற்றி ரூ.15 கோடிக்கு மேல் சொத்து குவிப்பு: பரபரப்பு தகவல்கள்