பெரம்பூர்: கொடுங்கையூர் காவல்நிலைய போலீசாரால், கடந்த 12ம் தேதி மாலை விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகர் (31), உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததற்கு காவல்துறையே காரணம் என ராஜசேகரின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சுமார் 31 பேர் எழும்பூர் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சிபிசிஐடி டிஎஸ்பி சசிதர் முன்பு தங்களது விளக்கத்தை அளித்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி ஆய்வாளர் உட்பட 5 பேரிடமும் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 10 போலீசார் மற்றும் பொதுமக்கள் 4 பேர் என பலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த ராஜசேகரனின் தாயார் உஷாராணி, அண்ணன் மணி, வளர்ப்பு தந்தை உட்பட 6 பேரிடம் நேற்று சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். …