சென்னை: புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி 2வது தெருவில், குடும்ப பிரச்னை காரணமாக சண்டை ஏற்படுவதாக நேற்று அதிகாலை புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், எஸ்ஐ நரசிம்மன், ரோந்து வாகன டிரைவர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், அங்கிருந்து காவல் நிலையம் திரும்பினர்.அப்போது, ரோந்து வாகனத்தில் வைத்திருந்த ட்ராக்கிங் மொபைல் போன் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் எஸ்ஐ நரசிம்மன் புகார் செய்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் வானமாமலை வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்கு சென்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, வாலிபர் ஒருவர் ட்ராக்கிங் மொபைல் போனை திருடி சென்றது தெரியவந்தது. விசாரணையில், புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேஷ் தெருவை சேர்ந்த ஆகாஷ் (20) என்பவர், ரோந்து வாகனத்தில் இருந்து ட்ராக்கிங் மொபைல் போனை திருடியது தெரிந்தது. அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ட்ராக்கிங் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது புதுவண்ணாரப்பேட்டை, ஆர்.கே.நகர் காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது….