Saturday, June 29, 2024
Home » போலீஸ் தேடியதால் எலிபேஸ்ட் சாப்பிட்டார் காதலனால் கடத்தப்பட்ட சிறுமி திடீர் உயிரிழப்பு: காதலன், தாய் உள்பட 8 பேர் கைது

போலீஸ் தேடியதால் எலிபேஸ்ட் சாப்பிட்டார் காதலனால் கடத்தப்பட்ட சிறுமி திடீர் உயிரிழப்பு: காதலன், தாய் உள்பட 8 பேர் கைது

by kannappan

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் தும்பைப்பட்டியைச் சேர்ந்த தம்பதியின் 17வயது மகள் கடந்த மாதம் 14ம் தேதி, வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிந்து, 3 தனிப்படைகள் அமைத்து சிறுமியை தேடினர். விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த நாகூர் ஹனிபாவுடன் சிறுமி பழகி வந்ததும், அவருடன் சிறுமி சென்றதும் தெரியவந்தது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி நாகூர் ஹனிபாவின் தாயார் மதினா பேகம், மயக்க நிலையில் இருந்த சிறுமியை, அவரது தாயார் வீட்டில் விட்டுச்சென்றுள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே, சிறுமியை கடத்திச்சென்றதாக நாகூர் ஹனிபாவை தனிப்படை போலீசார் 5ம் தேதி கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியை காதலித்து வந்ததாகவும், பிப். 14ம் தேதி திருப்பரங்குன்றத்தில் உள்ள நண்பர் பெருமாள்கிருஷ்ணனின் வீட்டிற்கு, நண்பர்களின் உதவியுடன் சிறுமியை கடத்திச்சென்றதாகவும், அடுத்த நாள் அங்கிருந்து ஈரோடு பள்ளிபாளையத்தில் உள்ள சித்தப்பா இப்ராஹிம் வீட்டிற்கு சென்று, அங்கு தங்கியிருந்ததாகவும் நாகூர் ஹனிபா தெரிவித்துள்ளார்.போலீசார் தேடுவதை அறிந்ததும், தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் நாகூர் ஹனிபாவும், சிறுமியும் எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளனர். ஆனால் நாகூர் ஹனிபா அதை சாப்பிடாமல் துப்பியுள்ளார். சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை நாகூர் ஹனிபாவின் தாயார் அழைத்து வந்து, பெற்றோர் வீட்டில் விட்டுச்சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அந்த சிறுமி, நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியை கடத்த  உதவியாக இருந்த  மதுரையை சேர்ந்த பிரகாஷ், திருப்பரங்குன்றம் பெருமாள்கிருஷ்ணன், திருப்பூர் ராஜாமுகமது மற்றும் சாகுல்ஹமீது ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நாகூர் ஹனிபாவின் தாயார் மதினா பேகம், அத்தை ரம்ஜான் பேகம், உறவினர் ராஜாமுகமது ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.* கொலை வழக்காக பதிவுமதுரை எஸ்பி பாஸ்கரன் கூறுகையில், ‘‘நாகூர் ஹனிபா, ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் சிறுமியுடன் வாழ்ந்துள்ளார். கடத்தல் தொடர்பாக மேலூர் போலீசாரால் போக்சோ சட்டம் உள்பட 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போது சிறுமி இறந்து விட்டதால் அது, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. டாக்டர்கள் பரிசோதனைப்படி சிறுமி பலாத்காரம் செய்யப்படவில்லை. போதை மருந்து உட்கொள்ளவில்லை. தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்….

You may also like

Leave a Comment

eighteen − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi