திருத்தணி, செப்.10: ஆந்திர மாநில அரசு வாகனம் என போலி ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சென்னை வந்த டூரிஸ்ட் வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே ஆந்திர எல்லைப் பகுதியில் பொன்பாடி சோதனைச் சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற டூரிஸ்ட் வேனை நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
அதில், காவல்துறையினர் பயன்படுத்தும் அவசரகால ஹாரன் ஒலித்தபடி, ஆந்திர மாநில அரசு வாகனம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் போலி நம்பர் பிளேட்டை பயன்படுத்தியும், தமிழ்நாடு மாநில வரி செலுத்தாமலும் அந்த வேன் இயக்கப்பட்டது கண்டறியப்பட்டது. பின்னர், வாகன உரிமையாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்ததில், தமிழக அரசுக்கு வரி செலுத்தாமல் ஏமாற்ற இயக்கப்படுவதும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, டூரிஸ்ட் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.