அம்பத்தூர்: போலி ஆவணம் மூலம் ரூ.12 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்து, வீட்டு மனைகளாக விற்பனை செய்த சகோதரர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சூளை பகுதியை சேர்ந்தவர் பக்கிரி. இவரது மனைவி ராஜகுமாரிக்கு சொந்தமாக அம்பத்தூர் அடுத்த ஒரகடம், செங்குன்றம் மெயின் ரோட்டில், ரூ.12 கோடி மதிப்புள்ள 10,246 சதுர அடி நிலம் உள்ளது. சமீபத்தில் ராஜகுமாரி தனது நிலத்தை பார்வையிட சென்றபோது, அங்கிருந்த சிலர், இது தங்களுக்கு சொந்தமான நிலம் என கூறியதுடன், அதற்கான ஆவணத்தையும் காண்பித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த ராஜகுமாரி, ஆவடி காவல் ஆணையரகத்தில் இதுபற்றி புகார் செய்தார். இதையடுத்து, ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரின் உத்தரவின்பேரில், நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ஜான் டேவிட் குமார் (48), அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (53) ஆகியோர், ராஜகுமாரி நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து, அதை, திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த ரபி ஜெயக்குமார் (43) என்ற பில்டருக்கு விற்பனை செய்ததும், அவர் அந்த நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றி, 12 பேருக்கு விற்பனை செய்ததும் தெரிந்தது. இதையடுத்து, ஜான் டேவிட் குமார், ஆனந்தராஜ், ரபி ஜெயக்குமார் ஆகிய மூவரையும் கைது செய்து, திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். போலி ஆவணம் மூலம் நிலத்தை விற்க பத்திரப்பதிவுக்கு உதவியாக இருந்த பத்திரப்பதிவு துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது….