திருப்பூர், ஜூன் 14: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் கடந்த 2015ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ரூபேஸ், இவரது மனைவி சைனி, அனூப், கணணன், வீரமணி ஆகியோரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். ரூபேஸ், சைனி ஆகிய இருவரும் திருப்பூரில் தங்கியிருந்தபோது போலி ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கியதாக வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கியது. இதையடுத்து திருச்சூர் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்போடு ரூபேஷ் அழைத்து வரப்பட்டார். உடல் நலக்குறைவால் சைனி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில் ரூபேஷ் நேற்று நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் முன்னிலையில் ஆஜரானார். அரசு தரப்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் கனகசபாபதி ஆஜரானார். தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ரூபேஸை போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர்.