விருதுநகர், அக்.11: திருவில்லிபுத்தூரில் போதை மாத்திரை விற்ற மெடிக்கலுக்கு சீல் வைக்கப்பட்டது. விருதுநகர் எஸ்பி ஸ்ரீனிவாச பெருமாள் வெளியிட்ட தகவல்: விருதுநகர் சிவகாசி ரோட்டில் உள்ள கல்லூரி அருகில் சில தினங்களுக்கு முன் அருப்புக்கோட்டையை சேர்ந்த யோகராஜன்(43), திருவில்லிபுத்தூர் குறுக்கன்குளத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்ற ஆனந்த்(35) இவரும் போதை தரக்கூடிய மாத்திரைகளை வைத்திருந்த குற்றத்திற்காக ஆமத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் திருவில்லிபுத்தூரில் உள்ள மெடிக்கல் கடையில் மாத்திரைகள் வாங்கி வந்து விற்றதாக தகவல் தெரிவித்தனர். மெடிக்கல் கடை உரிமையாளர் வெங்கடேஷ்வரன்(32) முறையான ஆவணங்கள் ஏதுமின்றி மாத்திரைகள் வைத்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து எஸ்பி ஸ்ரீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநருக்கு தகவல் தெரிவித்து ஆவணங்கள் இன்றி மாத்திரைகள் விற்பனை செய்த மருந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.