சிவகாசி, ஜூன் 10: கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பணி மனையில் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருபவர் ரமேஷ். இதே பணி மனையில் கண்டக்டராக பணியாற்றி வருபவர் ராம்குமார்(52). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று கோவையில் இருந்து சிவகாசி நோக்கி அரசு பஸ்சில் வந்துள்ளனர். பஸ் திருத்தங்கல் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி, அரசு பஸ் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதம் அடைந்தது. இது குறித்து அரசு பஸ் கண்டக்டர் ராம்குமார் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் லாரி டிரைவர் தஞ்சாவூரை சேர்ந்த அன்பரசன்(45) என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் குடிபோதையில் லாரி ஓட்டியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.